Posted in

இந்தியா-சீனா உறவில் திபெத் “முள்” : சீனா கடும் எச்சரிக்கை!

தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் விவகாரம் இந்தியாவுடனான உறவுகளில் ஒரு “முள்ளாக” இருப்பதாக சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. 14வது தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாரிசு குறித்து அவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்துகளும், அதற்கு இந்தியா அளித்த ஆதரவும் இந்தப் புதிய பதட்டத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

திபெத்தின் ஆன்மீகத் தலைவரான 14வது தலாய் லாமா, ஜூலை 6 ஆம் தேதி தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்கு முன்னதாக அவர் வெளியிட்ட ஒரு காணொளிப் பதிவில், தனது மறுபிறவி “காடன் போட்ராங்” அறக்கட்டளையால் மட்டுமே அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தலையிட உரிமை இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தலாய் லாமாவின் வாரிசைத் தேர்வு செய்யும் செயல்முறையில் சீனாவின் தலையீட்டிற்கு எதிரான ஒரு நேரடியான அறிவிப்பாகக் பார்க்கப்படுகிறது.

1959 ஆம் ஆண்டு சீன ஆட்சிக்கு எதிரான தோல்வியுற்ற கிளர்ச்சிக்குப் பிறகு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போதிலிருந்து, இந்திய அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. தலாய் லாமாவின் மறுபிறப்பை அங்கீகரிப்பதில் மத மரபுகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, உள்நாட்டு அங்கீகாரம், “தங்க கலசம்” செயல்முறை மற்றும் மத்திய அரசின் (சீனா) ஒப்புதல் ஆகியவற்றின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. சீனா, திபெத் மீதான தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், திபெத்திய பௌத்தத்தின் மீது தனது செல்வாக்கைப் பரப்பவும் நீண்ட காலமாகவே முயற்சி செய்து வருகிறது.

தலாய் லாமாவின் அறிவிப்பிற்குப் பிறகு, இந்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தலாய் லாமாவின் முடிவு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் மிகவும் முக்கியமானது. அவரது வாரிசைத் தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே முழுமையாக உள்ளது. இது முற்றிலும் மத நிகழ்வு” எனக் குறிப்பிட்டு, தலாய் லாமாவிற்கு ஆதரவாக வலுவான நிலைப்பாட்டை எடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “இந்தியா தனது வார்த்தைகளிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். திபெத் தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட சீனாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடுவதை நிறுத்துவதுடன், இந்தியா – சீனா இடையிலான உறவில் ஏற்படும் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதை நிறுத்த வேண்டும். தலாய் லாமாவின் சீன எதிர்ப்புக் கொள்கை குறித்து இந்தியா தெளிவுபடுத்துவதுடன், திபெத் தொடர்பான பிரச்னைகளில் தனது உறுதிமொழியை இந்தியா மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலாய் லாமா விவகாரம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கனவே எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்த வாரிசுப் பிரச்சினை மேலும் ஒரு “முள்ளாக” அமைந்துள்ளது.

Exit mobile version